உ.பி.,யில் பாஜக மூத்த தலைவர் பிரிஜ்பால் மீது மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு!
காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநில மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான பிரிஜ்பால் திவோடியா மீது வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முராத் நகரில் இருந்து காஜியாபாத்துக்கு தனது காரில் பாதுகாவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேருடன் பிரிஜ்பால் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள், அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியில் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பிரிஜ்பால் மற்றும் அவரது பாதுகாவலர் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.