காந்தியையும், மோடியையும் ஒப்பிட்டு வீட்டு வாசலில் போஸ்டர் ஒட்டிய பாஜக எம்.பி. - காங். கண்டனம்
டெல்லி: மகாத்மா காந்தியையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு தனது வீட்டிற்கு வெளியே போஸ்டர் ஒட்டி பிரச்சினையில் சிக்கியுள்ளார் பாஜக எம்.பி. ஒருவர்.
டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. விஜய் கோயல். இவர் தனது வீட்டு வாசலில் போஸ்டர் ஒன்றை ஒட்டி வைத்துள்ளார். காந்தி ஜெயந்தியை ஒட்டி வைக்கப்பட்டுள்ள அதில், மகாத்மா காந்தியையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதாவது மோடி சபர்மதி ஆசிரம்த்தில் இருந்து வந்த துறவி என எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயல் கூறுகையில், "காந்திஜி என்ன சொன்னோரா அதையும், பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதையும் அந்த போஸ்டரில் நான் குறிப்பிட்டுள்ளேன். இருவருமே சபர்மதியில் இருந்து வந்தவர்கள். காந்தி காட்டிய வழியில் மோடி நடந்து வருகிறார்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோயலின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘மகாத்மா காந்தியை பாஜக இழிவு படுத்தி விட்டதாக'க் குற்றம் சாட்டியுள்ளது.