ஆட்சிக் காலம் முழுவதும் ராஜ்யசபாவில் பெரும்பான்மையை இழந்து நிற்கும் பா.ஜ.க.
டெல்லி: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக் காலம் முடியும் வரையில் அதாவது 2019ஆம் ஆண்டு வரையில் ராஜ்யசபாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை என்பதே கிடைக்காத நிலைதான் நீடிக்கும்.
245 இடங்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 67 இடங்கள்தான் இருக்கின்றன. இதில் பா.ஜ.க.வுக்கு 48 எம்.பி.க்கள்தான் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 78 எம்.பி.க்கள் உள்ளனர். ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு தேவை 123 எம்.பி.க்கள்.
ராஜ்யசபாவில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாததால் லோக்சபாவில் என்ன மசோதாவை நிறைவேற்றினாலும் ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. மாநில சட்டசபை தேர்தல்களில் வென்றாவது ராஜ்யசபாவில் பெரும்பான்மையை பெற்றுவிடலாம் என்ற பா.ஜ.க.வின் கனவு டெல்லி, பீகாரில் அடுத்தடுத்து அடி வாங்கிக் கொண்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 3 இடங்களில்தான் பா.ஜ.க. வென்றது. இதனால் ராஜ்யசபாவில் ஒரு எம்.பி.கூட கிடைக்காமல் போனது.
தற்போது பீகார் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியையே சந்தித்துள்ளது பா.ஜ.க. பீகார் மாநிலத்துக்கு மொத்தம் 16 ராஜ்யசபா எம்.பி.க்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 5 பீகார் எம்.பி.க்கள் ஓய்வு பெற உள்ளனர். இந்த 5 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களே.
பீகார் மாநிலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 41 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் அம்மாநிலத்தில் இருந்து ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி.தான் பாஜகவுக்கு கிடைக்கும்.
இதன் பின்னர் அஸ்ஸாம், கேரளா, உத்தரப்பிரதேசம், தமிழகம் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இவை அனைத்துமே பா.ஜ.கவுக்கு சவாலான மாநிலங்கள். ஆகையால் மத்திய அரசு பதவிக் காலம் முடிவடையும் 2019ஆம் ஆண்டு வரை ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை என்பது கனவாகவே இருக்கும்.