போலீஸ் குதிரை கால் உடைப்பு வழக்கில் திடீர் திருப்பம்.. பாஜக தொண்டர் கைது! எம்.எல்.ஏவுக்கு நிம்மதி
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ், குதிரையின் காலை உடைத்ததாக பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், வழக்கில் திடீர் திருப்பமாக, குதிரையை தாக்கியதாக பாஜக தொண்டர் பிரமோத் போரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் கடந்த திங்கட்கிழமை பாஜக சார்பில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி நடந்தது.

அப்போது போலீசார் லத்தி சார்ஜ் நடத்தியுள்ளனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி போலீஸ் லத்தியை பிடுங்கி, காவல்துறையின் ரோந்து குதிரையான சக்திமானை அடித்து அதன் ஒரு காலை ஒடித்தார் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து பான்ட்நகர் கால்நடை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு சக்திமானுக்கு அறுவை சிகிச்சை செய்து காலை சரியாக்கியுள்ளது.

சக்திமானின் காலில் ஏற்பட்ட காயத்தால் அதன் காலை வெட்டவேண்டிய தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறினர் என மூத்த போலீஸ் அதிகாரி சதானந்த் தாதே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜோஷி குதிரை சக்திமான் எப்படி உள்ளது என்பதை பார்க்க இன்று அது இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அதற்கு கேரட் கொடுத்தார். மேலும், தான் தவறு செய்தது நிரூபணமானால் தனது காலை வெட்டி தரவும் சம்மதம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்திய ஆய்வில், குதிரையை அடித்தது கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர் பிரமோத் போரா என்பது தெரியவந்தது. அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
தொலைக்காட்சி செய்திகளை பார்த்த நடிகை திரிஷா, கணேஷ் ஜோஷி நரக நெருப்பில் எரிவார் என்று சாபம் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications