பியூன் வேலையில் சேர வரிசையில் நின்ற எம்.எல்.ஏ. மகன்.. சத்தியமாக நம்ம ஊரில் இல்லை!
அஜ்மீர்: ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹீரா லால் வர்மாவின் மகன் ஹன்ஸ்ராஜ் பியூன் வேலையில் சேர வரிசையில் நின்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ. வாக தேர்வு செய்யப்பட்டவர் பாஜகவைச் சேர்ந்த ஹீரா லால் வர்மா. அவரது மகன் ஹன்ஸ்ராஜ் 8ம் வகுப்பு தான் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மகன் தன் வழியில் அரிசயலுக்கு வருவதை விரும்பவில்லை வர்மா. இதையடுத்து ஹன்ஸ்ராஜை அவரது படிப்புக்கு ஏற்றவாறு பியூன் வேலைக்கு செல்லுமாறு கூறினார் வர்மா.

தந்தையின் பேச்சைக் கேட்டு ஹன்ஸ்ராஜ் ராஜஸ்தான் மாநில விவசாயத் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்த பியூன் வேலைக்கான நேர்முக காணலில் கலந்து கொண்டார். அவர் பிறரை போன்று வரிசையில் நின்றார்.
இது குறித்து வர்மா கூறுகையில்,
என் மகன் தற்போது நிவாயில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அவரின் மாதச் சம்பளம் ரூ. 5 ஆயிரம். அவருக்கு படிப்பு வராததால் பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றியடைய முடியவில்லை. அதனால் பியூன் வேலையில் சேர்வது தான் அவருக்கு இருக்கும் ஒரே வழி.
அவரது படிப்புக்கும், தகுதிக்கும் ஒத்துவராத வேலையை செய்ய நான் அவரை ஊக்குவிக்க மாட்டேன். என் மகன் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளது ஒன்றும் குற்றம் இல்லை. வசதியாக வாழ என் குழந்தைகள் குறுக்கு வழியில் செல்ல நான் விட மாட்டேன்.
நான் முதுகலைப்பட்டம் பெற்றவன். படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியவன். சமூக நலத்துறையில் நான் துணை தலைவராக இருந்துள்ளேன். அரசு வேலை தான் என் மகனுக்கு பாதுகாப்பு என்று நினைக்கிறேன் என்றார்.
வர்மாவின் மூத்த மகன் கவுன்சிலராக இருந்தவர். தற்போது அவர் வியாபாரம் செய்து வருகிறார். மற்றொரு மகன் அண்மையில் தான் பட்டம் பெற்றுள்ளார். வர்மாவின் மகள் பி.எட். படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications