இமாச்சலில் ஆட்டம் ஆரம்பம்.. ஆளுநரை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்.. அரங்கேறும் அரசியல் நாடகம்
சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் சலசலப்புக்கு மத்தியில் அம்மாநில ஆளுநரை காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உறுப்பினர்களாக இருந்த 56 பேரின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. ராஜ்யசபாவில் காலியாகும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஏனைய 15 இடங்களுக்கு போட்டி இருந்ததால் கர்நாடகா, உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. இமாசல பிரதேசத்தில் காலியாகும் ஒரு உறுப்பினர் பதவிக்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜனும் போட்டியிட்டனர். மொத்தம் 68 எம் எல் ஏக்கள் உள்ள அந்த மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்ட நிலையில் இருவரும் தலா 34 ஓட்டுகளை பெற்றனர். முடிவில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேட்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்ததாக சொல்லப்படுகிறது. இப்படி மாற்றி வாக்களித்ததாக சொல்லப்படும் எம்எல்ஏக்களை சிஆர்பிஎஃப் வீரர்களும், ஹரியானா போலீசாரும் சேர்ந்து கடத்தி சென்றுவிட்டதாக இம்மாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டியுள்ளார்.
கட்சி மாறி வாக்களித்ததன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை விலை பேசியுள்ளதாகவும், இப்படியாக மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பை நடத்த பாஜக முயல்வதாகவும் முதல்வர் குற்றம்சாட்டினார். இதற்கு மத்தியில் இமாசால பிரதேச அரசுக்கு பெரும்பான்மை இழந்துவிட்டதாக பாஜக கூறியது.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பிய நிலையில் இன்றைய தினம் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக எம்எல்ஏக்கள் இன்று இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவைச் சந்தித்தனர்.
மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வருவது குறித்த பரபரப்புக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 40 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர். மூன்று இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications