பாட்னாவில் லிப்ட்டுக்குள் சிக்கி 30 நிமிடங்கள் அல்லாடிய பாஜக தலைவர் அமித் ஷா
பாட்னா: பாஜக தலைவர் அமித் ஷா பாட்னா சென்றபோது அங்கிருந்த அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த லிப்ட்டில் சிக்கி 30 நிமிடங்கள் திண்டாடியுள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷா பீகார் மாநிலம் பாட்னாவுக்கு வியாழக்கிழமை சென்றார். பீகாரி மொழியில் வெளியாகும் நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அவர் பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நேற்று இரவு 11.15 மணிக்கு அவர் விருந்தினர் மாளிகையில் உள்ள லிப்டில் ஏறினார். அவருடன் பாஜக தலைவர்கள் சிலர் இருந்தனர்.
லிப்ட் திடீர் என்று நின்றுவிட்டது. இதையடுத்து லிப்ட் நிறுவனத்திற்கு அவரது பாதுகாவலர்கள் போன் செய்து பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் உடனே வரவில்லை. இதனால் அமித் ஷா லிப்டுக்குள் திண்டாடியுள்ளார். பின்னர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வந்து லிப்ட்டின் கதவை உடைத்து அமித் ஷா, பாஜக தலைவர்களை வெளியே கொண்டு வந்தனர். அமித் ஷா இன்று காலை டெல்லிக்கு கிளம்பிச் சென்றார்.
இது குறித்து பீகார் பாஜக தலைவர் மங்கள் பாண்டே கூறுகையில்,
அரசு விருந்தினர் மாளிகையின் நிலைமை இப்படி என்றால் சாதாரண மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்றார்.
அமித் ஷா லிப்டுக்குள் சிக்கி 30 நிமிடங்கள் திண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.