டெல்லி சட்டசபை தேர்தல்: 270 அம்சங்களுடன் "தொலைநோக்கு" அறிக்கை வெளியிட்ட பா.ஜ.க.!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 'தொலைநோக்கு' அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் டெல்லியை அழகான நகராக மாற்றுவது, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் என்பது உட்பட 270 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கேஜ்ரிவால், பாரதிய ஜனதா சார்பில் கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஏற்கெனவே அறிவித்ததுபோல் தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியீட்டு விழாவில் டெல்லி பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஹர்ஷவர்தன், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :
பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசாட்சியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்.
முதல்வர் அலுவலகத்துடன் அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் எப்போதும் இணைந்திருக்க வழிவகை செய்யப்படும்.
டெல்லியில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கப்படும்.
மக்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். எனவே மாதந்தோறும் 'தில் கி பாத்' என்ற பெயரில் ரேடியோ மூலம் டெல்லிவாசிகளுக்கு அரசு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். 30 நாட்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
டெல்லி சுத்தமான, அழகான, சர்வதேச தரத்திற்கு இணையான நகராக மாற்றப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பு, டெல்லியை சர்வதேச நகராக மாற்றுவது, வெளிப்படையான ஆட்சி அதிகாரம், தடையற்ற மின்சாரம், வீட்டு வசதி, குடிநீர் வசதி என 270 அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications