ராகுலை பாராட்டிவிட்டு பலே பல்டியடித்த 'பங்காளி' வருண்
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தமது அமேதி தொகுதியில் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக பாஜக வேட்பாளரும் ராகுலின் சித்தப்பா மகனுமாகிய வருண் காந்தி பாராட்டியிருந்தார். ஆனால் திடீரென தாம் எந்த ஒரு கட்சி வேட்பாளரையும் குறிப்பிட்டுப் பாரட்டவில்லை என்றும் வருண் காந்தி பல்டியும் அடித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்திராவின் இளைய மகன் மறைந்த சஞ்சய் காந்தியின் மகன் வருண் காந்தி உ.பி.யின் சுல்தான்பூர் தொகுதியிலும் அவரது தாய் மேனகா காந்தி பிலிபத் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், "ராகுல் காந்தி தமது அமேதி தொகுதியில் குறுந்தொழிற்சாலைகளை உருவாக்கியிருக்கிறார். அதுதான் நமக்கு இப்போது அவசியமானது." என்று வருண் காந்தி கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு ராகுல் காந்தியும் கூட பதிலளித்திருந்தார். "அமேதியில் நான் செயல்படுத்திய திட்டங்களை மற்றவர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருந்தார் ராகுல். ஆனால் பாஜக வேட்பாளராக இருந்து கொண்டு ராகுலை எப்படி வருண் புகழலாம் என்ற சர்ச்சை பாஜகவில் எழுந்தது.
இதனால் ஒரே போடாக வருண் காந்தி பல்டி அடித்துவிட்டார். "என்.ஜி.ஓக்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கூட்டத்தில் அமேதி தொகுதி சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டேன். அப்படி சொல்வதாலேயே எந்த ஒரு கட்சியையும் அல்லது வேட்பாளரையும் அங்கீகரித்து பாராட்டுவதாகிவிடாது" என ட்விட்டரில் திடீர் விளக்கம் கொடுத்திருக்கிறார் ராகுலின் பங்காளி வருண்.












Click it and Unblock the Notifications