தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: கர்நாடக முதல்வர் பதவி விலக பாஜக போர்க்கொடி
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய ரயில்வே அமைச்சருமான சதானந்தகவுடா குடும்பத்தினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜக போர்க்கொடி தூக்கியுள்ளது.
மத்திய அமைச்சர் சதானந்தகவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது நடிகை மைத்ரி என்பவர் பெங்களூர் போலீசில் பலாத்கார புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் கார்த்திக்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு அந்த நடிகை புகார் அளித்தார்.

இதையடுத்து ஆர்.டி.நகர் போலீசார் கார்த்திக் கவுடாவை தேடி வந்தனர். ஆனால் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றபிறகு கார்த்திக் கவுடா போலீசில் ஆஜரானார். தற்போது நிபந்தனை ஜாமீனில் கார்த்திக் கவுடா உள்ளார்.
இந்நிலையில் சதானந்தகவுடாவின் அரசியல் உதவியாளர் திம்மேகவுடா, சதானந்தகவுடா மனைவியின் உறவுக்காரர் கவுதம், கார்த்திக்கவுடாவின் உறவுக்காரரும், நண்பருமான முரளி, சதானந்தகவுடாவின் தொழில்முறை கூட்டாளி அசோக் பை, சதானந்தகவுடாவின் அண்ணன் பாஸ்கர் கவுடா ஆகிய 5 பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூர் காவல்துறை வேவுபார்க்க அனுமதி கேட்டு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தை, மத்திய உளவுத்துறை சேகரித்துள்ளது. இதன்மூலம் சதானந்தகவுடாவுக்கு இந்த விவகாரம் சென்று சேர்ந்துள்ளது.
இந்த பிரச்சினை தற்போது அரசியலில் சூறாவளியை உருவாக்கியுள்ளது. கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக) நிருபர்களிடம் கூறுகையில், "மத்திய ரயில்வே அமைச்சர், அவரது குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனை ஒரு போதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது. இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை பாஜக சாதாரணமாக விட்டுவிடாது என்றார்.
அதுபோல் பாஜக மூத்த தலைவர்கள் சுரேஷ்குமார், அசோக் உள்ளிட்ட பலரும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன், முதல்வர் சித்தராமையா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதுபற்றி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறுகையில், "மத்திய ரயில்வே அமைச்சர் மகன் விவகாரம் தொடர்பாக போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சதானந்த கவுடா, அவரது உறவினர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications