ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்- கிருஷ்ணம்ம ராஜூ
காக்கிநாடா: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணம்ம ராஜு தெரிவித்தார்.
காக்கிநாடா தும்மலபேட்டாவில் நடைபெற்ற "தூய்மை இந்தியா" பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர் காமினேநி ஸ்ரீநிவாசுலு, முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணம்ம ராஜு மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கிருஷ்ணம்ம ராஜு, "நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். இத்தனை நாள் அவர் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது கேள்விக் குறியாக இருந்தது.
ஆனால் "லிங்கா" இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், அரசியலில் ஈடுபட பயமில்லை, தயக்கம்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இதன்மூலம் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
ரஜினி பாஜகவில் இணைய வேண்டும். அவர் பாஜகவில் இணைந்தால் தமிழகத்தில் மட்டுமின்றி, தென்னிந்தியா முழுவதும் கட்சி பலம்பெறும்" என்று கிருஷ்ணம்ம ராஜு தெரிவித்தார்.