மோடி கூட்டத்தில் குண்டு வைக்க 3 குழுக்களை அனுப்பிய குண்டுவெடிப்பு சதிகாரர்கள்
டெல்லி: நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் வெடிகுண்டுகளை வைப்பதற்காக 3 குழுக்களாகப் பிரிந்து சென்றுள்ளனர் சதிகாரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பாட்னாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக பாட்னா காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் 6 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது...
23 வயதான தெஷீன் அக்தர்தான் இந்த குண்டுவெடிப்புக்கு மூல காரணம். வெடிகுண்டுச் சம்பவங்கள் நடந்தபோது இவன் பாட்னாவில்தான் இருந்துள்ளான்.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியப் புள்ளிகளில் இவனும் ஒருவன். பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சதி வேலைகளைக் கவனித்து வந்தான்.
மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்காக 3 குழுக்களை உருவாக்கி அனுப்பியுள்ளான் அக்தர். அதில் ஒரு பிரிவுதான் ரயில் நிலையத்தில் குண்டு வைத்தது. அங்குதான் முதல் குண்டு வெடித்தது.
மற்ற இரு பிரிவினர், காந்தி மைதானத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இந்த மைதானத்தில்தான் பாஜக கூட்டம் நடந்தது.
காந்தி மைதானப் பூங்காவிலும் சுற்றுப் பகுதிகளுமாக மொத்தம் 6 வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
வெடிக்காத நிலையில் நான்கு குண்டுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் ஒருவனான அய்னுல் என்கிற தாரிக், குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவன். இன்னொரு நபர் இம்தியாஸ் என்கிற கலிமுதீன் அன்சாரி. இவனை பாட்னா ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர் போலீஸார்.
இவர்கள் தவிர மற்ற நால்வரான அக்தர் உள்ளிட்டோர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பீகாரிகன் சமஸ்திபூரைச் சேர்ந்தவன் அக்தர். இவனது தலைக்கு ஏற்கனவே போலீஸார் ரூ. 10 லட்சம் விலை வைத்துள்ளனர். வாரணாசி, 2011ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு, ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களிலும் இவனுக்குத் தொடர்பு உள்ளது.
பல்வேறு வேடங்களில் இவன் சுற்றித் திரிவது வழக்கம். பெரும்பாலும் டூரிஸ்ட் கைடு போல பல பகுதிகளுக்கும் இவன் செல்வான். இதன் மூலம் சதிச் செயல்களை நடத்துவதற்கான வேவு பார்ப்பதில் வல்லவன்.












Click it and Unblock the Notifications