பெங்களூரின் ஒரே பெண் பஸ் டிரைவர்.. அவருக்கும் பாதுகாப்பில்லை.. சரமாரியாக அடித்த ஆண் டிரைவர்!
பெங்களூரு: பெங்களூரு பெருநகர பஸ் போக்குவரத்துக் கழகத்தின் (பிஎம்டிசி) ஒரே பெண் பஸ் டிரைவர் என்ற பெருமை படைத்தவரான பிரேமா ராமப்பா நடபட்டியை , இன்னொரு பஸ்ஸின் ஆண் டிரைவரும், கண்டக்டரும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
41 வயதான பிரேமா இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாந்திநகர் 3வது பஸ் டிப்போவில் பணியாற்றி வருகிறார் பிரேமா. இவர்தான் பெங்களூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் டிரைவர் ஆவார். சம்பவத்தன்று ஹோஸ்மாட் சிக்னல் அருகே கையைக் காட்டி பஸ்சை நிறுத்தி ஏறியுள்ளார் பிரேமா. அப்போது அந்தப் பஸின் ஆட்டோமேட்டிக் டோர் சரியாக மூடவில்லை.
இதனால் எரிச்சலடைந்த டிரைவரும், கண்டக்டரும், பிரேமாவுடன் சண்டைக்குப் போய் விட்டனர். இது ஸ்டாப்பே இல்லை. கையைக் காட்டி இஷ்டத்திற்கு ஏறுகிறீர்கள் என்று கூறியுள்ளனர். அதற்குப் பிரேமா பொறுமையாகத்தான் பதிலளித்துள்ளார். ஆனாலும் டிரைவரும், கண்டக்டரும் ஓய்வதாக இல்லை. தொடர்ந்து சண்டை பிடித்துள்ளனர்.
அது முற்றி இருவரும் சேர்ந்து பிரேமாவை சரமாரியாக அடித்துள்ளனர். இதைப் பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களைத் தடுத்து பிரேமாவைக் காப்பாற்றினர்.
பின்னர் பிரேமா, பஸ் சிவாஜி நகர் வந்து சேர்ந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பெளரிங் மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேராக போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் தற்போது அந்த டிரைவர், கண்டக்டர் மீது 354, 323 ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் டிரைவராக சேருவதற்கு முன்பு நர்ஸாக பணியாற்றியுள்ளார். 2009 முதல் பிஎம்டிசியில் பணியாற்றி வருகிறார். பிஎம்டிசியில் 3000 பெண் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் கண்டக்டர்கள்தான் அதிகம். ஆனால் டிரைவர், பிரேமா மட்டுமே. அவருக்கே அங்கு மரியாதை இல்லை என்பது அதிர்ச்சியூட்டுதாக உள்ளது.











Click it and Unblock the Notifications