அக்கா, தங்கையை தூக்கில் போட மும்பை உயர்நீதிமன்றம் தடை
மும்பை: மகாராஷ்டிராவில் 9 சிறார்களைக் கடத்திக் கொலை செய்த வழக்கில், இரு சகோதரிகளைத் தூக்கில் போடுவதற்கு பம்பாய் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரை சகோதரிகள் ரேணுகா (45) மற்றும் சீமா (39). இவர்கள் குழந்தைகளை கடத்தி, பிச்சை எடுக்க வைத்து அதில் வரும் வருமானத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இதற்காக 13 குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தனர். பிச்சையெடுக்க மறுத்த காரணத்துக்காக 9 குழந்தைகளை ஈவு-இரக்கமின்றி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவத்துக்கு சகோதரிகளின் தாய் அஞ்சனா காவித், ரேணுகாவின் கணவர் கிரண் ஷிண்டே ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். இது தொடர்பாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, கோலாப்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது அஞ்சனா காவித் இறந்து விட்டார். கிரண் ஷிண்டே அப்ரூவராக மாறியதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கில் கொடூரமாக நடந்து கொண்டு 9 குழந்தைகளைக் கொலை செய்த ரேணுகா, சீமாவுக்கு கடந்த 2001ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சகோதரிகள் இருவரும் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை பரிசீலித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமீபத்தில் மனுவைத் தள்ளுபடி செய்தார். இதையடுத்து இருவரையும் தூக்கில் போட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்தியாவில் இதுவரை பெண்கள் தூக்கில் போடப்பட்டதில்லை. இதனால் இந்த இருவரும்தான் தூக்கில் போடப்படும் முதல் பெண்கள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ரேணுகா, சீமா ஆகியோர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், தங்களது கருணை மனு மீது முடிவு செய்ய குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகளுக்கு மேல் எடுத்து கொண்டார். முடிவு எடுப்பதில் செய்த கால தாமதத்தை கருத்தில் கொண்டு, தங்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் வி.எம். கனடே, பி.டி. கோடே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரேணுகா, சீமா ஆகியோரின் மனுவை விசாரித்து முடிவு எடுக்கும் வரை அவர்கள் இருவரையும் தூக்கில் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications