மும்பையில் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு அனுமதி அளித்தது ஹைகோர்ட்
மும்பை: மும்பையில் வரும் 17-ந் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட அரசின் தடை உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. இருப்பினும் அன்றைய நாளில் விலங்குகளை கொல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்வைத்து மும்பை மாநகராட்சி இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது. இத்தடை உத்தரவு கடும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தத் தடைக்கு எதிராக பாம்பே மட்டன் டீலர்கள் சங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனூப் வி.மோதா, அஜ்மத் சையது ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் உத்தரவு நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஒரு பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடியது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். ஆனால், அந்நாளில் விலங்குகளை கொல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் இறைச்சிக் கூடங்களை மூடும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும். மீன், முட்டை அசைவம் இல்லையா? இத்தடை கிளப்பியுள்ள அரசியல் சர்ச்சையானது மக்களின் உணவு பழக்கவழக்கங்களை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 2004-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா அரசு ஜெயின் திருவிழாவை ஒட்டி இறைச்சி விற்பனைக்கு இரண்டு நாட்களுக்குத் தடை விதித்திருந்தாலும், அது தீவிரமாக கடைபிடிக்கப்படவில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications