31 மாடி ஆதர்ஷ் குடியிருப்புகளை இடிக்க மும்பை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.
கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்கு கட்டப்பட்டது ஆதர்ஷ் குடியிருப்புகள். ஆனால் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு பதிலாக அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலருக்கும் முறைகேடாக இந்த குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த முறைகேடு புகாரால் அசோக் சவான் மகாராஷ்டிரா முதல்வர் பதவியை இழந்திருந்தார். இதனிடையே 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்புகள் சுற்று சூழலுக்கு மாறாக கட்டப்பட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆதர்ஷ் குடியிருப்புகளை இடிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றமும் இன்று 31 மாடி ஆதர்ஷ் குடியிருப்புகளை 3 மாதத்துக்குள் இடிக்க உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் ஆதர்ஷ் குடியிருப்பில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.