ஏடிஎம்மில் உங்களுக்கு பதில் வரிசையில் நிற்க வைக்க ஆள் வேண்டுமா?: மணிக்கு ரூ.90 ஒன்லி!
டெல்லி: ஏடிஎம் மையங்கள் முன்பு வரிசையில் நிற்க கட்டணத்தை வாங்கிக் கொண்டு ஆட்களை அனுப்பி வைக்கிறது டெல்லியை சேர்ந்த சிறு நிறுவனம் ஒன்று.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பிரதமர் மோடி தடை விதித்தாலும் விதித்தார் வங்கிகள், ஏடிஎம் மையங்கள் முன்பு எந்நேரம் பார்த்தாலும் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கிறார்கள்.
செலவுக்கு கையில் ரொக்கம் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். சரி ஏடிஎம் போகலாம் என்றால் அங்கு இருக்கும் நீண்ட வரிசையை பார்த்தாலே தலை சுற்றுகிறது.
இந்நிலையில் தான் டெல்லியை சேர்ந்த புக்மைசோட்டு என்ற நிறுவனம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதாவது உங்களுக்கு பதிலாக ஏடிஎம் மையங்கள், வங்கிகள் முன்பு வரிசையில் நிற்க அந்நிறுவனம் ஆட்களை அனுப்பி வைக்கும்.
வரிசையில் நிற்க வருபவர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.90 கட்டணம் அளிக்க வேண்டும். 2, 3 மணிநேரம் ஏடிஎம் மையங்களில் கால் கடுக்க நிற்க விரும்பாதவர்கள் புக்மைசோட்டுவை அணுகுகிறார்கள்.
இந்த புக்மைசோட்டு சேவை டெல்லி என்சிஆர் பகுதியில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.