கடத்தப்பட்ட பெண்ணை மீட்காவிட்டால் முஸ்லீமாக மதம் மாறுவோம்.. உபி. பிராமணர்கள் எச்சரிக்கை
பாக்பாட், உ.பி.: தலித் இளைஞரால் கடத்தப்பட்ட எங்களது பெண்ணை போலீஸார் உடனடியாக கண்டுபிடித்துத் தராவிட்டால் அத்தனை பேரும் இஸ்லாமுக்கு மாறி விடுவோம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிராமணர்கள் எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிங்கவாலி அஹிர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தினர் பெரும் கொதிப்புடன் காணப்படுகின்றனர். இவர்களது சமூகத்தைச் சேர்ந்த டீன் ஏஜ் வயதுப் பெண்ணை காணவில்லை. அவரை, அதே பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திக் கொண்டு போய் விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை இருவரையும் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியலவில்லை. அந்தப் பெண் செப்டம்பர் 8ம் தேதி முதல் காணவில்லை.
இந்த நிலையில் இச்சமூகத்து முக்கியஸ்தர்கள் கூடுதல் எஸ்.பி. வித்யாசாகரை சந்தித்து மீண்டும் கோரிக்கை மனு கொடுத்தனர். இதுகுறித்து வித்யாசாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 150க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தினர் என்னை வந்து சந்தித்து காணாமல் போன பெண்ணை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்க வைத்தனர்.
அவரை தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கடத்திக் கொண்டு போய் விட்டதாகவும், அவரை மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் கூண்டோடு இஸ்லாமுக்கு மாறி விடுவோம் என்றும் கூறியுள்ளனர் என்றார் கூடுதல் எஸ்.பி.
பிராமணர்களின் இந்த எச்சரிக்கை உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தற்போது தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications