வெற்றி துரைசாமியின் நிலை என்ன? நதியில் கிடைத்த மூளை திசுக்கள்.. டிஎன்ஏ முடிவுகள் நாளை வர வாய்ப்பு
சிம்லா: வெற்றி துரைசாமி சென்ற கார் விபத்துக்குள்ளாகிய இடமான சட்லஜ் ஆற்றங்கரையோரம் மனித மூளையின் திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகள் கிடைத்து இருந்த நிலையில் அதனை போலீசார் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் நாளை வெளியாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும் அதிமுக முன்னாள் நிர்வாகியுமான சைதை துரைசாமியின் ஒரே மகன் வெற்றி துரைசாமி. வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். வெற்றி துரைசாமியுடன் அவரது உதவியாளரான கோபிநாத் என்பவரும் உடன் சென்றிருந்தார்.

சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு வந்துகொண்டிருந்த போது டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரனமாக கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சட்லஜ் ஆற்றுக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில், கார் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
ஆனால், காரில் பயணம் செய்த வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை. வெற்றி துரைசாமியை போலீசார் தீவிரமாக தேடினர். விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் சைதை துரைசாமி இமாச்சல் பிரதேசம் விரைந்தார். மேலும் தன் மகனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து இன்று 7வது நாளாக போலீசார் வெற்றி துரைசாமியை தேடி வருகின்றனர்.
சைதை துரைசாமியின் மகன் உடலை தேடும் பணி 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி சட்லஜ் நதியின் கரையோரம் உள்ள பாறை இடுக்குகளில் இருந்து மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல், ரத்த மாதிரியும் எடுக்கப்பட்டது. இந்த திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகளை இமாசல பிரதேச போலீசார் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளின் விவரம் நாளை வெளியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இதற்காக வெற்றி துரைசாமியின் பெற்றோரின் டிஎன்ஏ விவரங்களும் பெறப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாளை வெற்றி துரைசாமியை கண்டுபிடித்துவிடுவோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications