திருப்பதி பிரம்மோற்சவம்: கருட சேவையை தரிசித்த லட்சக்கணக்கான பக்தர்கள்
திருப்பதி: திருமலை திருப்பதியில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நேற்று நடைபெற்றது. பெரியதிருவடியான கருடவாகனத்தின் மீது மலையப்பசாமி ஏழுந்தருளி திருவீதி உலா வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும் வண்ண வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மோகினி அலங்காரத்தில் வீதி உலா
பிரம்மோற்சவத்தையட்டி திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பசாமி பல்லக்கு வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனர். அப்போது வண்ண வண்ண மலர்களாலும், விலை உயர்ந்த தங்க, வைர வைடூரிய நகை அலங்காரத்திலும் வந்த மலையப்பசாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருடவாகன சேவை
மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை கோவில் அருகில் உள்ள சகஸ்ர தீப அலங்கார மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான கருட சேவை இரவு 8 மணிக்கு கருட சேவையில் வலம் வந்தார் மலையப்பசாமி,

தங்க, வைர ஆபரணங்கள்
தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும், விலை உயர்ந்த நகைகள், மூலவிக்ரக மூர்த்தி அணிந்திருக்கும் தங்க சங்கிலி மகரகண்டி, லட்சுமி ஹாரம், எமரால்டு பதித்த நகைகளும் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்தது.

கோவிந்தா முழக்கம்
8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கருட வாகனத்தில் மலையப்பசாமி மாட வீதிகளில் வலம் வந்ததை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மழை தூரல் விழுந்த போதும் மலையப்பசாமியைக் காண நான்கு மாட வீதிகளிலும் பக்தர்கள் குவிந்திருந்தனர். ஊர்வலத்தின் போது ‘ஏழு கொண்டலவாடா! வேங்கடரமணா! கோவிந்தா! கோவிந்தா! என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை எட்டியது. 24 மணிநேரமும் பேருந்து போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications