வாவ் கலக்குதே.! விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா போட்டோ.. நாசா வீரர் வெளியிட்ட கலக்கல் போட்டோ
பிரயாக்ராஜ்: மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஜனவரி 13ம் தேதி முதல் மகா கும்பமேளா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளா போட்டோவை சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்வு நடைபெறுகிறது. இந்துக்களின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றாக மகா கும்பமேளா கருதப்படுகிறது.

மகா கும்பமேளா:
கங்கை, யமுனை மற்றும் இந்துக்கள் புராணங்களில் உள்ள சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜ் நகரில் தான் மகா கும்பமேளா நடைபெறும். ஒவ்வொரு முறையும் இதில் பல கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்தாண்டு கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கு உலகெங்கும் இருந்து பல கோடி பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். ஆனால், இப்போது மகா கும்பமேளா பூமியைத் தாண்டி விண்வெளியில் இருந்தும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐஎஸ்எஸ் எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் டான் பெட்டிட் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மகா கும்பமேளாவின் படங்களைப் பகிர்ந்துள்ளார். இது மகா கும்பமேளாவின் பிரம்மாண்டத்தைக் காட்டுவதாக உள்ளது. அமெரிக்காவின் மிகவும் வயதான விண்வெளி வீரராக அறியப்படும் டான் பெட்டிட் கடந்த காலங்களிலும் விண்வெளியில் இருந்து எடுக்கப்படும் பூமி தொடர்பான பல படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் தான் இப்போது இந்த மகா கும்பமேளா படங்களையும் எடுத்துள்ளார்.
நாசா வீரர் பகிர்ந்த போட்டோ:
இந்த போட்டோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டான் பெட்டிட், "சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து கங்கை நதி கரையில் நடைபெறும் மகா கும்பமேளா இரவு எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள். உலகில் மிகப் பெரியளவில் மனிதர்கள் கூடும் நிகழ்ச்சி இதுவாகும்" என்று பதிவிட்டுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா பல கோடி பக்தர்கள் வருகை தருவார்கள். பூமிக்கு மேலே மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் சுற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், இந்த மாபெரும் நிகழ்வை அதன் அதி நவீன கேமராக்களை கொண்டு போட்டோவாக எடுத்துள்ளது.
நெட்டிசன்கள்
இந்த போட்டோக்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் பலவித கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். விண்வெளியில் தெரியும் நட்சத்திரத்திற்கு இணையாக மகா கும்பமேளா பிரம்மாண்டமாக இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மகா கும்பமேளா உபி அரசு
மகா கும்பமேளா மிகச் சிறப்பாக நடைபெற மத்திய அரசும் உபி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. குறிப்பாக மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் 24 மணி நேரமும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மின்சாரம் கிடைக்க உ.பி அரசு ரூ.400 கோடி முதலீடு செய்துள்ளது. முக்கிய பகுதிகளில் 182 கிமீ ஹைடென்ஷன் லைன்கள், 40,000 ரிச்சார்ஜபிள் பல்புகள் மற்றும் 2,700 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏஐ கேமராக்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications