எதற்கெடுத்தாலும் மழுப்பல் பதில்... தினகரனுக்கு காப்பு கட்டும் டெல்லி போலீஸ்
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் மழுப்பலான பதிலைத் தரும் டிடிவி தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன டெல்லி போலீஸ் வட்டாரங்கள்.
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலீசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராத டிடிவி தினகரன் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சுகேஷ் சந்திரா என்ற புரோக்கர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தார் தினகரன் என்பது வழக்கு. சுகேஷ் சந்திராவிடம் பிடிபட்ட ரூ1.30 கோடி ரொக்கத்தை முன்வைத்து இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது.

மழுப்பல் பதில்கள்
இவ்வழக்கில் டிடிவி தினகரன் கடந்த 2 நாட்களாக டெல்லி போலீசில் ஆஜராகி வந்தார். இந்த விசாரணையின் போது டெல்லி போலீசாரின் கேள்விகள் அனைத்துக்குமே தப்பிக்கும் வகையில் மழுப்பலான பதிலை மட்டுமே கூறியுள்ளார் தினகரன்.

நான் அவனில்லை பதில்
தினகரன் இப்படி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராதது டெல்லி போலீசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுகேஷ் சந்திராவுக்கும் தினகரனுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை போட்டு காண்பித்துமே தினகரன் 'நான் அவனில்லை' என பதிலளித்துள்ளார்.

நேருக்கு நேர் விசாரணை
இதையடுத்து சுகேஷ் சந்திராவையும் தினகரனையும் நேருக்கு நேர் உட்கார வைத்து விசாரிக்கவும் டெல்லி போலீஸ் முடிவு செய்துள்ளனர். அப்போது தினகரன் தப்பிக்க முயற்சிக்கும் வகையில் பதிலளிக்கவே வாய்ப்பு உள்ளது.

கைது- திஹார் சிறை
அப்படி தொடர்ந்தும் ஒத்துழைக்காதபட்சத்தில் டிடிவி தினகரனை கைது செய்ய அதிகம் வாய்ப்புள்ளதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் கைது செய்யப்படும் தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.












Click it and Unblock the Notifications