பாகிஸ்தானில் இருந்து துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஊடுருவிய ட்ரோன்.. சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எஃப்!
பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
டெல்லி : பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்து சமீப நாட்களாக பாகிஸ்தான் டிரோன்கள் அடிக்கடி ஊடுருவி வருகின்றன. பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களுடன் ஊடுருவிய டிரோன், எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் செக்டாரில் உள்ள, இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் நேற்று (மார்ச் 10) வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகல் 1 மணி அளவில் மீண்டும் ஒரு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒரு டிரோன் மெல்டா கிராமத்தையொட்டிய இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. இதை கவனித்த எல்லை பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த டிரோன் நபிநகர் கிராமத்தின் தோட்ட வயல்வெளியில் விழுந்தது. அந்த டிரோன் 6 இறக்கைகள் கொண்டது. அந்த டிரோனில் இணைக்கப்பட்டிருந்த ஏ.கே ரக துப்பாக்கி, 2 தோட்டா குப்பிகள் மற்றும் 40 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதே பஞ்சாப் எல்லையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications