வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ.60,000 வரை வரிச்சலுகை!
டெல்லி: வீட்டு வாடகைக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு தற்போது வருமான வரி விலக்கு வழங்கப்பட்டு வருகிறது. அது ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு நடுவே இன்று மத்திய பட்ஜெட்டை ஜெட்லி தாக்கல் செய்தார்.

வருமான வரி விலக்கில் ஜெட்லி எந்த மாற்றமும் செய்யவில்லை என்றபோதிலும், வாடகை உச்சவரம்பில் மாற்றம் செய்துள்ளார். இது வருமான வரி தாக்கல் செய்வோருக்கு ஓரளவுக்கு பலன் தரும்.
ஜெட்லி கூறுகையில், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிப்போர், அலுவலகத்தில் வீட்டு வாடகை படி கிடைக்கப் பெறாதவர்கள் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறமுடிகிறது. பெருகியுள்ள வாடகை உயர்வை கருத்தில் கொண்டு, வாடகை உச்சவரம்பை ரூ.60 ஆயிரமாக உயர்த்துகிறேன்.
வருமான வரி, 80ஜிஜி பிரிவின்படி 60 ஆயிரம் வரையிலான வாடகை செலவீனத்திற்கு வரி விதிக்கப்படாது. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
அதாவது, வருமான வரி தாக்கல் செய்யும்போது, இனிமேல் வாடகையாக ரூ.60 ஆயிரம் வரை கணக்கு காட்ட முடியும். மொத்த வருமானத்தில் இருந்து அந்த 60 ஆயிரமும் கழிக்கப்பட்டு எஞ்சிய தொகைக்குதான் வருமான வரி விதிக்கப்படும் என்பதால், மாத சம்பளக்காரர்களுக்கு இதனால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
அதேபோல மற்றொரு அறிவிப்பும், முக்கியமானது. தற்போது, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு 15 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகையில் ரூ.2 ஆயிரத்தை மீண்டும் திருப்பித் தரும் நடைமுறை உள்ளது.
வருமான வரியின் 87ஏ பிரிவின்கீழ், இந்த திருப்பித்தரும் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளார் ஜெட்லி. இதன்மூலம், வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.3 ஆயிரம் கூடுதலாக லாபம் கிடைக்கும். மொத்தம் 2 கோடி பேருக்கு பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications