20 தமிழர்களின் சாவு திட்டமிட்ட படுகொலை? போஸ்ட்மார்ட்டத்தில் “திடுக்” தகவல்கள்!
திருப்பதி: ஆந்திராவில் 20 தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிர்ச்சி தகவல்களை பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஆந்திர வனப்பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஆந்திர போலீஸ் விளக்கமளித்த நிலையில், அதற்கு மாறாக உடற்கூறு ஆய்வுகள் இருக்கின்றன.
தொழிலாளர்களின் முக்கிய உறுப்புகளில் குண்டுகள் துளைத்திருப்பது உடற்கூறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மிக அருகிலிருந்து போலீஸார் சுட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
தொழிலாளி ஒருவரின் மார்பில் 2 குண்டுகளும், முதுகில் 4 குண்டுகளும் துளைத்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். தொழிலாளர்களை போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆந்திர மாநில காவல்துறை மறுத்துள்ளது.