கர்நாடகா- மகா. இடையே மீண்டும் எல்லை பிரச்சனை- எடியூரப்பா கொடும்பாவி எரிப்பு- பேருந்துகள் நிறுத்தம்
கோலாப்பூர்/பெல்காம்: கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே மீண்டும் எல்லை பிரச்சனை வெடித்துள்ளது. மகாராஷ்டிராவில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை சிவசேனாவினர் எரித்துள்ளனர்.
பெல்காம் எல்லைப் பகுதி யாருக்கு சொந்தமானது என்பதில் கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பெல்காம் என்பது மும்பை மாகாணத்தில் இருந்தது என்கிறது. இதை கர்நாடகா நிராகரிக்கிறது.

அண்மையில் கர்நாடகாவுடனான எல்லை பிரச்சனை குறித்து ஆராய சகன் புஜ்பால், ஏக்நாத் ஷிண்டே ஆகிய 2 அமைச்சர்களை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நியமித்திருந்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் எல்லையில் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் 800 கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா நவநிர்மான் சேனா தலைவர் பீமசங்கர் பாட்டீல், 800 கிராமங்களை இணைக்க கோரும் மகாராஷ்டிரா அமைப்புகளின் தலைவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் என்றார். இருதரப்பு விமர்சனங்களால் இரு மாநில எல்லைகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மகாராஷ்டிராவில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் கொடும்பாவியை சிவசேனா இளைஞர் அணியினர் எரித்தனர்.
இதேபோல் பெல்காமில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கொடும்பாவி எரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications