தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் ஜெயலலிதா.. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல்
மறைந்த ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டெல்லி: மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா, தமிழகத்தில் தன்னிகரற்ற தலைவராகவும், பெண்ணுரிமையைப் போற்றுபவராகவும் திகழ்ந்ததாகவும் அந்த கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய பிரமுகர் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்களும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலிக்கு பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications