மாமியார் வீட்டிற்கு சென்ற சிஏஜி ஊழியர் கொலை: ஆணவக் கொலை?
லக்னோ: மும்பையில் சிஏஜி அலுவலக ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் சர்மா(29). அவர் பயிற்சி வகுப்புக்கு சென்ற இடத்தில் வேறு சாதியை சேர்ந்த சோனியா(26) என்ற பெண்ணின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.

பின்னர் இருவரும் வேலை தேடி மும்பை சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மனோஜுக்கு சிஏஜி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை கிடைத்தது. சோனியா மாநில அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் புக் கீப்பர் பணியை பெற்றார்.
முசாபர்நகர் குத்பா கிராமத்தில் இருக்கும் தனது மாமனார், மாமியாரை பார்க்க மனோஜ் கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார். மறுநாள் அவர் தனது பெற்றோரை பார்க்க கிளம்பிய போது சோனியாவின் சகோதரர்களும் அவருடன் சென்றுள்ளனர்.
மனோஜ் தனது பெற்றோரின் வீட்டை அடையவில்லை. சோனியாவின் சகோதரர்களையும் காணவில்லை. இதையடுத்து சோனியா தனது சகோதரர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தேடியபோது தான் மனோஜ் கொலை செய்யப்பட்டு கரும்புக் காட்டில் உடல் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
சோனியாவின் 4 சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மனோஜுக்கு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லிக்கு கிளம்பும் முன்பு மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் கர்ப்பணி பெண் கண் முன்பே அவரது கணவர் கொலை செய்யப்பட்டார். அது போன்றே மனோஜ் கொலையும் ஆணவக் கொலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications