நிறுத்துங்கள்... மும்பை கேம்பகோலா குடியிருப்பை இடிக்க சுப்ரீம் கோர்ட் தடை

மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கும் நடவடிக்கையில் மும்பை மாநகராட்சி இறங்கியுள்ளது. இதனால் சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் வசிப்போர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபலமான கேம்பகோலா அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச்சுவரை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு இடிக்க ஆரம்பித்ததால் பரபரப்பு கூடியது. மேலும் காஸ் இணைப்பு, மின்சார இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் இடிப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்துப் போராடியதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது. இருப்பினும் போலீஸாரை வரவழைத்த அதிகாரிகள் அவர்களின் பாதுகாப்புடன் இடிப்புப் பணியை தொடர்ந்தனர்.
இந்த நிலையில்,உச்சநீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தற்போது இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசித்து வருவோர் அவற்றைக் காலி செய்ய 7 மாத அவகாசமும் உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்களில் வந்த செய்திகளைப் பார்த்து உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கேம்பகோலா குடியிருப்பு மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
தெற்கு மும்பையில் உள்ள கேம்பகோலா குடியிருப்பில் மொத்தம் 102 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு சட்டத்திற்குப் புறம்பாக, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவேதான் இதை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் பில்டர்கள் தங்களை ஏமாற்றி இவற்றை விற்று விட்டதாக இங்கு குடியிருப்போர் கூறுகின்றனர். பல ஆண்டுகளாகவே இந்தப் பிரச்சினை நீடித்து வந்தது.
இந்த விவகாரத்தில் அரசியலும் புகுந்தது. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானையும், இங்கு வசித்து வருவோர் அணுகி உதவி கோயிருந்தனர். தங்களுக்கு இந்த வீடுகள் சட்டப்பூர்வமாக சொந்தமானதாக்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூட இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினரும் களத்தில் இறங்கியதால் கேம்பகோலா குடியிருப்புப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துக் காணப்பட்டது. தெற்கு மும்பை காங்கிரஸ் எம்.பியான மிலிந்த் தியோராவும், மகாராஷ்டிர முதல்வர் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 198 மற்றும் 89 ஆண்டுகளுக்கு இடையே கேம்பகோலா மைதானத்தில் மொத்தம் 7 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் ஒவ்வொரு தளத்திலும் ஐந்து மாடிகள்தான் கட்ட வேண்டும் என்று பில்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை மீறி பல மாடிகளை பில்டர்கள் மோசடியாக கட்டி விட்டனர். அதில் மிட்டவுன் என்ற கட்டடத்தில் மட்டும் 20 மாடிகள் உள்ளன. இன்னொரு கட்டடத்தில் 17 மாடிகள் உள்ளன.
கடந்த 1999ம்ஆண்டு முதலே இந்த விவகாரம் கோர்ட்டில் இழுபறியாக உள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி ஆய்வு செய்து, ஐந்து மாடிகளுக்கு மேல் உள்ள அத்தனை தளங்களையும் இடிக்க உத்தரவிட்டு நடவடிக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் மாநகராட்சியின் முடிவு சரியே என்று உத்தரவிட்டது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. நவம்பர் மாதத்திற்குள் அனைவரும் காலி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இடிப்புப் பணியை மாநகராட்சி தொடங்கியது.
தற்போது உச்சநீதிமன்றமே தலையிட்டு இடைக்காலத் தடை விதித்து, மேலும் 7 மாத அவகாசம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications