டெல்லியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு
டெல்லி: டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நேற்று ஓய்ந்தது. டெல்லியில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் தீவிரத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டன. இப்பிரசாரம் நேற்று மாலை 5 மணிக்கு ஓய்ந்தது.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஜராத் முதல்வரும், பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
ஐக்கிய ஜனதா தள வேட்பாளர்களை ஆதரித்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார், அக் கட்சியின் தலைவர் சரத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவரும், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி உள்ளிட்டோர் கடைசி கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர்.

810 வேட்பாளர்கள்
டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் 810 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை
டெல்லியில் மொத்தம் 1,19,36,582 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 4.05 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

முதல் முறையாக ஆம் ஆத்மி
இந்தத் தேர்தலில் முதன்முறையாகக் களம் காணும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அதன் தலைவர் அரவிந்த் கேஜரிவால்,பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

களத்தில் தேமுதிக
இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த தேமுதிக சார்பில் 11 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் கடந்த ஐந்து நாள்களாக டெல்லியில் முகாமிட்டுத் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

பலத்த பாதுகாப்பு
தலைநகராக டெல்லி இருப்பதால், தேர்தலைக் கண்காணிக்க கடுமையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இங்கு பாதுகாப்புக்காக சுமார் 5,000 மத்திய துணை ராணுவத்தினரும் டெல்லி காவல்துறையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications