ரூபாய் நோட்டுகள்... கீழ்நீதிமன்ற விசாரணைகளுக்கு 'நோ' தடை- மத்திய அரசு கோரிக்கை நிராகரிப்பு!
ரூபாய் நோட்டுகள் தொடர்பான கீழ்நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துவிட்டது.
டெல்லி: ரூபாய் நோட்டுகளுக்கு எதிராக பல்வேறு கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணைக்கும் தடை கேட்ட மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக நிராகரித்துவிட்டது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 4 பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. டெல்லி வக்கீல்கள் விவேக் நாராயண் சர்மா, சங்கம் லால் பாண்டே மற்றும் எஸ்.முத்துக்குமார்; அடில் ஆல்வி ஆகியோர் இவ்வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

இதனை கடந்த 15-ந் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், மக்களின் சிரமங்களைப் போக்க எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வி நோட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே மத்திய அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிமன்றங்களில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மனுவை, நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கொண்ட பெஞ்ச் நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அப்போது நீதிபதிகள், ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகளை பல்வேறு நீதிமன்றங்கள் விசாரித்தால், அது குழப்பத்தை உருவாக்கும் என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். மத்திய அரசின் மனுவை, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான வேறு ஒரு அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, கீழ் நீதிமன்ற வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன் வரும் 25-ந் தேதிக்குள் இவ்வழக்கில் விரிவான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மற்றொரு ரூபாய் நோட்டுகள் தொடர்பான மனு மீதான விசாரணையில் வழக்குகளை உடனே விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாள்தோறும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது; இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications