சிகரெட்களை சில்லைறையாக விற்க கூடாது – மோடிக்கு கேன்சர் நோயாளி கடிதம்
டெல்லி: உயிர்களைப் பலிவாங்கும் சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடைவிதிக்க கோரி பிரதமர் மோடிக்கு புற்று நோயாளி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்கும் யோசனைக்கு சில மத்திய அமைச்சர்களும், விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அந்த தடை நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மும்பையைச் சேர்ந்த முன்னாள் சுங்க ஆணையர் தீபக் குமார் சிகரெட்டுகளை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தான் சிகரெட்டுகளை தொடர்ந்து புகைத்ததால், 2008 ஆம் ஆண்டு தனக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டதாகவும், அதனால், தனது பேசும் திறன் பறிபோய், மெஷினின் உதவியால் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் சிரமப்படும் தனக்கு கடந்த ஆண்டு நாக்கில் புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும் அதையடுத்து நாக்கின் ஒருபகுதி துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்பதால் சிகரெட்டை சில்லறையாக விற்க தடை விதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.