மனைவி, சார்ந்திருப்போரின் வருமானத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்... சுப்ரீம்கோர்ட் அதிரடி!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனைவி மற்றும் தன்னை சார்ந்திருப்பவர்களின் வருமானத்திற்கான விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.
டெல்லி : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தன்னுடைய வருமான ஆதாரத்துடன், மனைவி மற்றும் தன்னை சார்ந்தோர்களின் வருமானத்தையும் வேட்பு மனு தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லோக் பிரஹாரி எனும் அரசு சாரா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததது. அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின் போது, தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை மட்டும் கணக்கில் காட்டுகிறார்கள். ஆனால், இந்த சொத்துக்கள் எப்படி வந்தது, அதற்கான வருமானம் என்ன? சொத்துக்கள் சேர்த்ததற்கு வருமான ஆதாரம் என்ன? என்பது குறித்து குறிப்பிடுவதில்லை.
இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தன்னுடைய சொத்துக்கள், மனைவி, பிள்ளைகளின் சொத்துக்களை கணக்கில் காட்டும் போது, அந்த சொத்துக்கள் வந்த விதம், தன்னுடைய வருமானம், மனைவியின் வருமானம், பிள்ளைகளின் வருமானம் ஆகியவை வந்த வழி, வருமானத்தின் ஆதாரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். அதற்கு வேட்புமனு தாக்கல் படிவத்தில் தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
இதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு நேற்று இறுதித் தீர்ப்பளித்தது.

சொத்துக்களுக்கான ஆதாரம்
அதில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகள் மற்றும் தன்னை சார்ந்தோரின் வருமானத்தையும், அதன் வருமானம் எப்படி வருகிறது?, சொத்துக்கள் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம்? உள்ளிட்ட விவரங்களையும் வேட்புமனுத் தாக்கலின் போது தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தேர்தல் ஆணையம் பதில்
முன்னதாக இந்த விசாரணையின் போது, அரசியல்வாதிகளின் சொத்துக்கள் 500 மடங்கு வரை ஒரு தேர்தலுக்கும் அடுத்த தேர்தலுக்கும் இடையிலான வேட்புமனுத் தாக்கலில் திடீரென உயர்ந்து வருவது குறித்து மத்திய அரசு விசாரிப்பதில்லை என நீதிபதிகள் கடிந்து கொண்டனர். மேலும், ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுத் தாக்கலின்போது, தன்னுடைய வருமானம், மனைவி, பிள்ளைகளின் வருமானத்தின் வழியையும் குறிப்பிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

சொத்து சேர்த்தது எப்படி?
அப்போதுதான் தேர்தலில் வெளிப்படைத் தன்மை இருக்கும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, வேட்பாளர்கள் அரசுடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்து இருந்தாலோ, அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஏதேனும் ஒப்பந்தம் ஆதாயம் பெற்று இருந்தாலோ அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications