எனது மாநிலம்; எனது மக்கள் என்ற முழக்கத்துடன்...புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் அம்ரீந்தர் சிங்..!
சண்டிகர்: காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகிய கேப்டன் அம்ரீந்தர் சிங் நாளை புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்.
பஞ்சாப் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வருந்திய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சோனியாவுக்கும், ராகுலுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். மேலும், நவ்ஜோத் சிங் சித்து ஆபத்தானவர் என்றும் தேச விரோத செயல்களில் ஈடுபடக்கூடியவர் எனவும் கடுமையாக சாடினார்.
காங்கிரஸில் இனியும் நீடித்து பலனில்லை எனக் கூறிய கேப்டம் அம்ரீந்தர் சிங், விரைவில் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இதை மையமாக வைத்து பல்வேறு செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வந்துக்கொண்டிருந்தன. கேப்டன் தனிக்கட்சி தொடங்குவார் என சிலரும் பாஜகவில் இணைவார் என சிலரும் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சண்டிகரில் நாளை புதிய அரசியல் கட்சி தொடங்கவிருக்கிறார் அம்ரீந்தர் சிங். இதனிடையே கடந்த நான்காண்டுகளாக அம்ரீந்தர் சிங் தனது பண்ணை வீட்டை விட்டு வெளியவே வரவில்லை என சாடியுள்ளார் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து.
கேப்டன் அம்ரீந்தர் சிங்குக்கு காங்கிரஸ் உரிய மரியாதை கொடுத்ததாகவும் கட்சியிலும், ஆட்சியிலும் அவர் பல பதவிகளை அனுபவித்துள்ளதாகவும் பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ராந்தவா சாடியுள்ளார். பஞ்சாப் மக்களை வடுவுடன் தான் அம்ரீந்தர் சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளருடன் நட்பு பேணுவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே எதைப்பற்றியும் பொருட்படுத்தாத அம்ரீந்தர் சிங் புதிய பயணத்தை தொடங்குவதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு ஒரு முடிவெடுத்து தீர்வு அளித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் தனது கட்சியை கூட்டணி அமைப்பார் எனத் தெரிகிறது. வரும் நாட்களில் இது குறித்த தெளிவான நிலைப்பாடு புரிய வரும்.
எனது மக்கள்; எனது மாநிலம் என்ற முழக்கத்தை முன் வைத்து அரசியல் கட்சியை தொடங்கும் அம்ரீந்தர் சிங், பஞ்சாப் மாநில அரசியலில் பழுத்த அனுபவம் நிறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதில் அம்ரீந்தர் உறுதியாக இருப்பது கவனிக்கத்தக்கது.