கெஜ்ரிவால் மகள் பற்றி ஃபேஸ்புக்கில் தரக்குறைவாக கருத்து தெரிவித்தவர் மீது வழக்கு
காசியாபாத்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் குறித்து தவறாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்தவர் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட நிர்வாகி சேத்தன் தியாகி போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் மற்றும் அக்கட்சி நிர்வாகி அல்கா லம்பா ஆகியோர் பற்றி பி.கே. ஜகோதியா என்பவர் ஃபேஸ்புக்கில் தரக்குறைவான கருத்துகளை தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி தியாகி கூறியது உண்மை என்பதை கண்டறிந்தனர். அதன் பிறகு ஜகோதியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியில் இருந்த அல்கா ஆம் ஆத்மி கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications