என்னா ஒரு வேகம்...! தமிழக இளைஞரைத் தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு- சித்தராமையா தகவல் #cauvery
பெங்களூரு: பெங்களூருவில் தமிழக இளைஞரைத் தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கடந்த 9-ந் தேதியன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது கன்னட திரைத்துறையினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இளைஞர் மீது தாக்குதல்
இதனை விமர்சித்து தமிழக இளைஞர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை போட்டார். இதற்காக அவரை கன்னட இனவெறி கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியது.
தமிழகம் கொந்தளிப்பு
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் கன்னட வாகனங்கள் தாக்கப்பட்டன. கர்நாடகா வங்கி முற்றுகையிடப்பட்டது.
வழக்கு போட்டுவிட்டோம்
இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தமிழக இளைஞரைத் தாக்கிய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அந்த நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியிருக்கிறார்.
தமிழருக்கு பாதுகாப்பு
மேலும் கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் சித்தராமையா உறுதியளித்திருக்கிறார். தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதற்கு தமிழகத்தில் எதிர்வினை காட்டப்பட்ட நிலையில்தான் கர்நாடகா அரசு விழித்துக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.