காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சாட்டையடி.. கர்நாடகாவில் நாளை அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பிவிடுத்துள்ளார் முதல்வர் சித்தராமையா.
காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்கு முன்பாக அமைக்க வேண்டும்.., தமிழகத்துக்கு சுமார் 3 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என இரு முக்கிய உத்தரவுகளை இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
தமிழகத்துடனான பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்றிருந்த சித்தராமையா இன்றும் டெல்லியிலேயே இருந்தார். சுப்ரீம்கோர்ட் உத்தரவை தொடர்ந்து, உடனடியாக அவர் பெங்களூர் திரும்பினார்.
நாளை மாலை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளதாகவும், உத்தரவு நகல் கிடைக்கும்வரை எதுவும் பேசப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று தண்ணீர் திறப்பதா வேண்டாமா என நாளைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மண்டியா மாவட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள். இதனால் பெங்களூர்-மைசூர் நடுவே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.