காவிரி விவகாரம்.. சோனியாவுடன் சித்தராமையா அவசர ஆலோசனை!
பெங்களூரு: காவிரி பிரச்சனை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொலைபேசியில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காதது ஏன்? இத்தனை காலம் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது என்று தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
அதோடு, காவிரி விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் மேலாண்மை வாரியமே முடிவு என்றும் தங்களது கருத்தை தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்துள்ளனர்.
அதோடு, நாளை (புதன்கிழமை) முதல் செப்டம்பர் 27ம் தேதி வரை கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். கர்நாடகாவுக்கு 70% பற்றாக்குறை இருப்பதால் காவிரியில் நீர் திறக்க முடியாது என அப்போது அவர் தெரிவித்தார். மேலும் கர்நாடக அரசு எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார் . காவிரி விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த சித்தராமையாவுக்கு சோனியா அறிவுறுத்தினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக சித்தராமையா அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்திவிட்டு, சட்டசபையையும் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க சித்தராமையா தயாரிவிட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சோனியாவுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.