காவிரி நீர் திறப்பு அளவை மாற்றியது சுப்ரீம் கோர்ட்.. செப். 20 வரை தினசரி 12,000 கன அடி விட உத்தரவு
டெல்லி: காவிரியில் தமிழகத்துக்கு வரும் செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கன அடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. தமிழகத்துக்கு காவிரியில் நீரை திறக்கும் உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடகா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்துடன் தள்ளுபடி செய்தது.
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவேண்டும் என்பது கடந்த 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. இதன்படி 6-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், அரசு வழக்கறிஞர்கள் ரகுபதி, மோகன் கத்தார்கி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு உச்சநீதிமன்றத்தின் பதிவாளர் வீட்டுக்கு சென்று அவரிடம் ஒரு மனுவை அளித்தனர்.

திருத்தம் கோரி மனு
அந்த மனுவில் 5-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும்; தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறக்க முடியாத நிலை உள்ளது என்று மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

விசாரணைக்கு அவசரம்
கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் நேற்று காலை பதிவாளரை சந்தித்து, திருத்தம் கோரும் மனுவை நேற்றே விசாரணைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து நேற்று மாலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இன்று விசாரணை
இதனையடுத்து திருத்தம் கோரும் கர்நாடகாவின் மனுவை இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கர்நாடகாவின் புதிய மனுவை இன்று காலை விசாரித்தது. அப்போது தமிழக அரசும் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றம் கண்டனம்
அதில், கர்நாடகா தரப்பு முன்வைக்கும் வாதத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்துக்கான உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடகா மதிக்காமல் செயல்படுவதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மக்கள் கொந்தளிப்பாக இருக்கிறார்கள் போன்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் சாடியிருந்தனர்.

தமிழகத்துக்கு நீர் திறக்க உத்தரவு
பின்னர் தமிழகத்துக்கு வரும் செப்டம்பர் 20-ந் தேதி வரை நாள்தோறும் 12,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்துக்கு நீர் திறக்கும் உத்தரவில் திருத்தம் கோரிய கர்நாடகாவின் மனுவையும் இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க கோரிய கர்நாடகாவின் கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.












Click it and Unblock the Notifications