4 மணி நேரம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்.. நீர் திறப்பு உத்தரவை மதிக்குமா கர்நாடகா?
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் 4 மணி நேரம் நடந்தது.
தமிழக அரசின் தொடர் சட்ட முயற்சியால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகள் இந்த இரண்டு அமைப்புகளிலும் உள்ளனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது.
தமிழக அரசின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஆலோசனையின்போது, இந்த மாதம் 34 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது தமிழகம். அதையேற்று இம்மாத பங்கான 34 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தனது பேட்டியின்போது நீர் திறப்பு அளவை தெரிவிக்க முடியாது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இம்மாதம் தமிழகத்திற்கு எவ்வளவு பங்கு தர வேண்டுமோ அவ்வளவு பங்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
காலை 11 மணிக்கு துவங்கிய ஆலோசனை கூட்டம், 4 மணி நேரங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று, பிற்பகல் 3 மணிக்கு நிறைவுற்றது.
முன்னதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது மாநிலத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அதில் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. எனவே காவிரி ஆணையத்தின் இன்றைய உத்தரவை கர்நாடகா ஏற்று நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.