கோர்ட் தீர்ப்பை எதிர்த்து யாரும் போராடக் கூடாது.. கர்நாடகா, தமிழகத்திற்கு சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
டெல்லி: காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல் வன்முறையில் இறங்கியது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது. பொது சொத்துக்களை தீவைத்து எரித்தது கண்டனத்துக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வரும் 15,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் விட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கடந்த 12ஆம் தேதி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்ய அந்த மீது உத்தரவு ஒன்றை பிறப்பித்த உச்சநீதிமன்றம் 20ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையொட்டி பெரும் கலவரங்கள் வெடித்தன.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் முழுவதும், போராட்டங்களும், வன்முறை கலவரங்களும் நிலவின. இதில் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளும் எரிக்கப்பட்டன. தமிழக பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிக்கப்பட்டன.
வன்முறையால் இழப்பு
இந்த வன்முறை சம்பத்தை கட்டுக்குள் கொண்டு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இரவும், பகலும் தொடர்ந்து பணியாற்றியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளும் வணிக நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இதனால் ரூ.25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழகத்திலும் சில இடங்களில் நடைபெற்ற சில சம்பவங்களால் பதற்றம் நிலவியது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை
இந்த வன்முறைகள் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்பு சிவக்குமார் என்பவர் சார்பாக மூத்த வக்கீல் ஆதிஷ் அகர்வால், வக்கீல் என்.ராஜாராமன் ஆகியோர் நேற்று ஆஜராகி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் வன்முறை சம்பவங்கள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இரு மாநிலங்களிலும் கலவரத்தைத் தூண்டும் சிலரின் செயல்களால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர்.
சட்டம் ஒழுங்கு விவகாரம்
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதாகவும், அந்த மனு, வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து மனுதாரர் சிவக்குமார் நேற்று காலை உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இரு மாநிலங்களிலும் நிலவும் பதற்றச் சூழலை கட்டுக்குள் கொண்டு வந்து இரு மாநில அரசுகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விலகிய நீதிபதி
இந்த மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில் கர்நாடகா, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கோரிய பொதுநல வழக்கில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி நாகப்பன் அறிவித்துள்ளார். இதனால், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் அமர்வு முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காவிரி பிரச்சனையில் கர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை தெரிவிக்காமல் வன்முறையில் இறங்கியது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது. பொது சொத்துக்களை தீவைத்து எரித்தது கண்டனத்துக்குரியது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டம் நடத்தக்கூடாது
இரு மாநிலங்களிலும் பந்த் உள்ளிட்ட எந்தப் போராட்டமும் நடக்கக் கூடாது. இவை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய புனிதமான கடமை மாநில அரசுகளுக்கு உண்டு. ஆயுதங்களைக் கொண்டு தாக்கக் கூடாது தீவைத்தல் கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.