காவிரி வழக்கு: கோர்ட் நேரத்தையும் தாண்டி அனல் பறந்த விவாதம்
பெங்களூர்: காவிரி வழக்கு விசாரணையின்போது வாத-பிரதிவாதம், மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்றதால், கோர்ட் நேரத்தை தாண்டியும் விசாரணை தொடர்ந்தது.
காவிரியிலிருந்து 50 டிஎம்சி தண்ணீர் கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கர்நாடக தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், 20ம் தேதிவரை தண்ணீர் விட வேண்டும் என்று கடந்த 12ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பும் ஆக்ரோஷமாக வாதத்தை முன்வைத்தனர். தமிழகம் தரப்பில் சேகர் நாப்தே, கர்நாடக தரப்பில் ஃபாலி நாரிமன், ஹரிஷ் சால்வே ஆகியோர் வாதிட்டனர்.
நாரிமனோ, உச்சநீதிமன்றம் காவிரி விவகாரத்தில் அடிக்கடி உத்தரவுகளை பிறப்பிப்பது தவறு என வாதிட்டார். தமிழக வழக்கறிஞரோ, வறட்சி பாதிப்பு கர்நாடகாவில் இருந்தாலும், அதற்கேற்ற வகையில் தண்ணீர் தர வேண்டும் என்று வாதிட்டார்.
கோர்ட்டில் இருந்த நிருபர் ஒருவர் கூறுகையில், இது இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் போல மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது என்றார். இப்படியாக வாத, விவாதங்கள் சென்றதால், உச்சநீதிமன்றத்தின் வேலை நேரத்தையும் தாண்டி வாதம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு உச்சநீதிமன்ற பணி நேரம் முடிய வேண்டியது. ஆனால், நீதிமன்றம் அரை மணி நேரம் கூடுதலாக மாலை 5 மணிவரை நடைபெற்றது.












Click it and Unblock the Notifications