நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ
கொல்கத்தா: போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்கத்தில் போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாரதா என்ற செய்தி இணையதளம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் படங்கள், வீடியோக்களை வெளியிட்டிருந்தது.

2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திடீரென பாஜகவில் சேர்ந்தார். ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவில் இருந்து சோவன் சட்டர்ஜி வெளியேறி இருந்தார்.

மேலும் மேற்கு வங்க அமைச்சரவை கடந்த வாரம் பதவியேற்ற அன்றே நாரதா வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஜகதீன் தன்கார் அனுமதி அளித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் காங். எம்.எல்.ஏ. மதன் மித்ரா, முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 4 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனிடையே அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். இதனால் மேற்கு வங்கத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications