நீதிபதி லஞ்ச வழக்கு.. 17 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் விடுதலை!
சண்டிகர்: லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவை 17 ஆண்டுக்குப் பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, சிபிஐ நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் என்பவரின் வீட்டிற்கு சென்ற கிளார்க் ஒருவர், ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொடுத்துள்ளார். இந்தப் பணம், இன்னொரு நீதிபதிக்கு லஞ்சமாக தரப்பட்டது என்றும், பெயரில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, வீடு மாறி வந்திருக்கிறது என்றும் புரிந்து கொண்ட நீதிபதி நிர்மல்ஜித் கவுர் உடனே போலீசில் புகார் கொடுத்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், ஹரியானா கூடுதல் வக்கீல் சஞ்சீவ் பன்சால் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி நிர்மல் யாதவுக்கு கொடுத்து அனுப்பிய லஞ்சப் பணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. சண்டிகர் காவல்துறையினரால் ஆகஸ்ட் 13, 2008 அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஊழல் வழக்கில் ஒரு பதவியில் இருக்கும் நீதிபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை 2010 ஆம் ஆண்டு முதல் சி.பி.ஐ விசாரித்து வந்தது. நீதிபதி நிர்மல் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 16 ஆண்டு விசாரணை நடந்த நிலையில், நேற்று (மார்ச் 29) சிபிஐ நீதிமன்ற நீதிபதி அல்கா மாலிக் தீர்ப்பை வெளியிட்டார். இதில், குற்றம் நிரூபணம் செய்யப்படவில்லை என்று கூறி, நீதிபதி நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், "நான் எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான விசாரணையில், நான் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி அரசு இல்லத்தில் இருந்து கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நீதிபதி நிர்மல் யாதவ் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications