குஜராத் போலி என்கவுண்டர் வழக்கு: சிபிஐ.யை காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துகிறது - அருண் ஜெட்லி
குஜராத்தில் நடந்த இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், அம்மாநில முதல்வர் நரேந்திரமோடிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்த வழக்கில் அமித் ஷாவை சிக்க வைத்து அவருடைய பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்து இருந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகிழ்ச்சி அடைந்து இருக்கும் என சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறியதாக டெல்லி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் ரஞ்சித் சின்கா அப்படி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என சி.பி.ஐ. சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி தனது வலைத்தள பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளாக சி.பி.ஐ. அமைப்பை சாதுர்யத்துடன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. சி.பி.ஐ. அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ.யை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தவறாக பயன்படுத்துகிறது.
முன்பு நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்த போதும் அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடைகள், பஸ் நிறுத்தங்களில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்தார்கள். அதன் காரணமாகத்தான் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்பட்டது.
தங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பவர்களைத்தான் சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கிறார்கள். பதவிக்காலம் முடிந்து பிறகு வேறு ஏதாவது பதவிகள் அளிப்பதாகவும் அவர்களுக்கு உறுதி அளிக்கிறார்கள். அதை எதிர்பார்த்து அந்த பதவிக்கு வருபவர்களும் நடந்து கொள்கிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அருண் ஜெட்லியின் இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி மறுத்துள்ளார்.மேலும், சி.பி.ஐ. சுதந்திரமான விசாரணை அமைப்பு என்றும், அதன் பணிகளில் அரசு குறுக்கிடுவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.