சுகாதார திட்ட ஊழல்... உ.பி. மாஜி முதல்வர் மாயாவதியிடம் சி.பி.ஐ. விசாரணை
லக்னோ: தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப் பிரதேச முதல்வராக 2006-2011ஆம் ஆண்டு காலத்தில் மாயாவதி இருந்த காலகட்டத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் அந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டது. அப்போது அந்த மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதன் பின்னர் தேசிய ஊரகத் திட்டமானது குடும்ப நலத்துறைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டு 100 மாவட்ட சுகாதார அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
இந்தப் பணியிடங்களில் அமர்த்தப்பட்டவர்கள் விதிகளுக்குப் புறம்பாக லஞ்சம் வாங்கிக் கொண்டு சுகாதாரத் திட்டத்தின் பல்வேறு ஒப்பந்தங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் பல ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாபு சிங் குஷ்வாஹா, முன்னாள் தலைமைச் செயலர் பிரதீப் சுக்லா உள்ளிட்ட 48 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் மாயாவதியிடம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையில் பெரும்பாலான கேள்விகளுக்கு மாயாவதி மழுப்பலான பதில்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications