கோவாவில் திடீர் திருப்பம்... ஆட்சி அமைக்கிறது பாஜக? மீண்டும் முதல்வராகிறார் மத்திய அமைச்சர் பாரிக்கர
கோவா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைக்க போவதாகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் முதல்வராக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
பனாஜி: கோவா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் முதல்வராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.
40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். கோவாவில் ஆட்சியை அமைக்க பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடுகின்றன.
இந்நிலையில் எம்ஜிபி, கோவா முன்னணி கட்சி ஆகியவற்றை சேர்ந்த 6 எம் எல்ஏ-க்களும், சுயேட்சை உறுப்பினர் பிரசாத் கோயங்கா, கோவிந்த் காவ்டே ஆகிய 2 எம்எல்ஏ-க்களும் ஆக 8 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கோவா முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.