கோஹினூர் வைரத்தை திரும்ப பெற சுமுகமான முறையில் நடவடிக்கை: மத்திய அரசு திடீர் பல்டி
டெல்லி: கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கோஹினூர் வைரமானது 105 காரட் மதிப்பு கொண்டது. இது தான் தற்போதுவரை உலகின் மிகப்பெரிய வைரமாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரமானது, பலரிடம் கைமாறி இறுதியில் கடந்த 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது. அப்போது முதல் பிரிட்டன் மன்னரின் பரம்பரை சொத்தாக மாறிய அந்த வைரம், தற்போது மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்த கிரீடமானது பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. பிரிட்டன் இளவரசர் வில்லியமை மணந்துள்ள இளவரசி கேத்மிடில்டன், அடுத்த மகாராணியாக பட்டம் ஏற்கும்பட்சத்தில் இந்த கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் அவரைச் சென்றடையும்.
இந்நிலையில் கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் அவ்வப்போது கோரிக்கை எழுந்து வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம், இங்கிலாந்து அரசால் திருடிச் செல்லப்படவும் இல்லை, வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்படவும் இல்லை.
மகாராஜா ரஞ்சித் சிங்கால் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்தது. இதனால், கோஹினூர் வைரம் மீதான உரிமையை இந்தியா விட்டுக் கொடுத்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் நிலையில் ஒரே நாளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று இரவு மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கோஹினூர் வைரம் பற்றிய மத்திய அரசின் கருத்து, இன்னும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால், ஊடகங்களில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த செய்தி, உண்மையின் அடிப்படையில் அமையவில்லை.
இந்த நேரத்தில், கோஹினூர் வைரத்தை சுமுகமான முறையில் மீட்டுக் கொண்டுவர எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு மீண்டும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறது. இதில் சுமுக தீர்வு உருவாகும் என்று இந்திய அரசுக்கை நம்பிக்கை உள்ளது இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications