இந்தியர்கள் கடத்தல்: முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை... அலட்சியம் செய்ததா மத்திய அரசு?
டெல்லி: ஈராக்கில் இந்திய தொழிலாளர்கள் கடத்தப்பட இருப்பதாக முன்கூட்டியே மத்திய அரசுக்கு உளவுத்துறை சார்பில் எச்சரிக்கை அனுப்பப் பட்டதாக தற்போது அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்கள் ஒரு தொழிலாளி தப்பித்து வந்துள்ளதையடுத்து மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தொழிலாளர்கள் கடத்தப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே, இது தொடர்பாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்ததாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அதில் மொசூல் நகரைக் கைப்பற்றியதும் தீவிரவாதிகள், அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களைக் கடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைசசகம், பிரதமர் அலுவலகத்துக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், அப்போது அந்த எச்சரிக்கையை அலட்சியப் படுத்திய மத்திய அரசு தற்போது கடத்தப்பட்ட இந்தியர்களை பத்திரமாக மீட்க கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.