ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த மூவர் மற்றும் ராஜிவ் வழக்கில் ஏற்கெனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேர் என 7 பேரையும் தமக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்தது.

இது குறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்கவும் தமிழக அரசு கோரியது. ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் முடிவை எதிர்த்து முறையீடு செய்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதன் மீது பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதன்படி உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, ராஜிவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இதில் அவர்கள் தங்கள் மீதமுள்ள வாழ்நாளை சிறையில்தான் கழிக்க வேண்டும். இந்த வழக்கில் கொலையாளிகளை மன்னித்து விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதற்குக் காரணம், மன்னிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications